செய்திகள்

காணும் பொங்கல்: மாமல்லபுரம்-பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2018-01-16 12:04 IST   |   Update On 2018-01-16 12:04:00 IST
காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுவதால் மாமல்லபுரம், பழவேற்காடு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு உற்சாகமாக பொழுதை கழித்தனர்.

மாமல்லபுரம்:

காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொழுதுபோக்கு இடங்கள், பூங்கா மற்றும் கடற்கரைகளில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு உற்சாகமாக பொழுதை கழித்தனர்.

காணும் பொங்கலை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே வேன், ஆட்டோ, பைக்களில் மாமல்லபுரத்துக்கு வரத்தொடங்கினர்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் நகருக்குள் சுற்றுலா பயணிகள் வாகனத்தை அனுமதிக்கவில்லை. அவர்களது வாகனங்களை நிறுத்த பக்கிங்காம் கால்வாய் சாலையில் தற்காலிக இடம் ஒதுக்கப்பட்டது. அரசு பஸ்கள் கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்தப்பட்டது.

கடற்கரை கோவில், புலிக்குகை, அர்ச்சுனன் தபசு, பட்டர்பால், ஐந்து ரதம், குடவரைகோயில் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அவர்கள் புல் தரைகளில் குடும்பத்துடன் அமர்ந்து வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். மாமல்லபுரம் கடலில் குளிக்க போலீசார் தடை விதித்து சவுக்கு தடுப்புகள் கட்டி இருந்தனர். தடையை மீறி யாரேனும் கடலில் குளித்து அலையில் சிக்கினால் அவர்களை காப்பாற்ற கடலோர காவல் படை நீச்சல் வீரர்கள் தயாராக இருந்தனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளிடம் திருடுவோர் மற்றும் பெண்களிடம் சில்மி‌ஷம் செய்வோரை கண்காணிக்க சாதாரன உடையில் போலீசார் ரோந்து பணியில் சென்றனர்.

டி.எஸ்.பி. சுப்புராஜ் உத்தரவின் பெயரில் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையில் மாமல்லபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பழவேற்காடு பகுதிக்கு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ், கார், இரு சக்கர வாகனங்கள் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அவர்கள் குடும்பத்துடன் அங்குள்ள டச்சுக்கல்லறை, லைட்ஹவுஸ், கடற்கரை சிந்தாமனிஸ்வரர் மணல்மேடு கோயில் லிங்கம் கிணறு, விஸ்வரூப தரிசன கோயில், மகிமை மாதா திருக்கோயில் ஜெல்ரியாகோட்டை ஆதி நாராயண பெருமாள் கோவில், மசூதி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். பழவேற்காடு ஏரிக்கரை பகுதியில் இருந்த பறவைகளை கண்டு ரசித்தனர்.

காணும் பொங்கலை யொட்டி பழவேற்காடுக்கு பொன்னேரி, செங்குன்றம் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்ட சுற்றுலா துறை சார்பில் பொங்கல் சுற்றுலா கலைநிகழ்ச்சிகள் இன்றும், நாளையும் மாலை 4 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெறுகிறது.

சுற்றுலா பயணிகள் வருகையொட்டி பழவேற்காடு கடலில் குளிக்கவும், படகு சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. டி.எஸ்.பி. ராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #tamilnews

Similar News