செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

Published On 2017-12-28 11:31 IST   |   Update On 2017-12-28 11:31:00 IST
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமேசுவரம்:

ராமேசுவரம், மண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இங்கிருந்து சென்று உங்கள் பகுதியில் மீன்பிடியுங்கள் என்று மிரட்டினர். மேலும் தொடர்ந்து இந்த பகுதியில் மீன்பிடிக்க வந்தால் சிறைபிடித்து செல்வோம் என எச்சரித்தனர். சில இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்தனர்.

இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து கொண்டு ஒவ்வொரு முறையும் நாங்கள் கடலுக்கு செல்கிறோம். ஆனால் தொடர்ந்து இலங்கை கடற்படை எங்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடிக்கிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றனர்.

Similar News