அரசு நிர்வாகம் குறித்து அதிகாரிகளிடம் விசாரிக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை: ராமகிருஷ்ணன்
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 22 மாவட்ட மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு மத்திய அரசின் பினாமி அரசாக செயல்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் புயலால் பேரழிவை சந்தித்துள்ளது. மீன்பிடிக்க சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. புயலால் இறந்த மக்களுக்கு கேரள அரசை போல நிவாரணம் வழங்கிட வேண்டும்.
குமரி மாவட்டத்தில் விவசாயம் முழுமையாக அழிந்துள்ளது. எத்தனை வாழை மரம், ரப்பர் மரம் சாய்ந்துள்ளது என ஒவ்வொரு மரத்திற்கும் நஷ்ட ஈட்டினை அரசு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆயிரத்து 58 விரிவுரையாளர்களை நியமனத்திற்கு ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு எழுத்துத் தேர்வு நடந்தது.
அதன்பிறகு நேர்முக தேர்வுக்கு அழைத்த போது போதிய மதிப்பெண் எடுக்காதவர்களுக்கு மதிப் பெண்களை திருத்தி முறைகேடு நடந்துள்ளது. இதில் 50 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. இதனை பணியில் உள்ள உயர்நீதி மன்ற நீதிபதியை கொண்டு விசாரிக்க வேண்டும். இதேபோல டாக்டர்கள் நியமனத்திற்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படாமலேயே 566 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில் முறைகேடு நடந்துள்ளது.
மாநில கவர்னர் விழாவிற்கு செல்லலாம். ஆனால் மாநில அரசு அமைச்சர்கள் செய்ய வேண்டிய வேலையை அவர் செய்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதுஅல்ல. கடலூரில் துறை ரீதியாக அதிகாரிகள், மாவட்ட கலெக்டரை அழைத்து அரசு நிர்வாகம் எப்படி நடை பெறுகிறது என்று கவர்னர் விசாரித்தார். அந்த அதிகாரம் கவர்னருக்கு இல்லை. இச்செயலை கண்டிக்கிறோம்.
அ.தி.மு.க. அமைச்சர்கள் வாய்மூடி மவுனம் காப்பது ஏற்று கொள்ளத்தக்கது அல்ல. இந்த அரசு மத்திய அரசின் பினாமி அரசு என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.