செய்திகள்

சத்தியமங்கலம் அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: புதுமாப்பிள்ளை பலி

Published On 2017-11-30 12:38 GMT   |   Update On 2017-11-30 12:38 GMT
சத்தியமங்கலம் அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மனைவி கண் முன்பு புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
சத்தியமங்கலம்:

டி.என்.பாளையம் அருகே உள்ள பள்ளத்து மேடு பகுதியை சேர்ந்தவர் பாலகுமார் (வயது 29). இவருக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுமாப்பிள்ளையான பாலகுமார் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு பெரிய கள்ளிப்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தார்.

மாரனூர் பிரிவு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளின் குறுக்கே ஒரு நாய் பாய்ந்தது. அதன் மீது மோதாமல் இருக்க பாலகுமார் மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு திருப்பினார்.

இதில் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது மோதியது. இதில் பாலகுமாரும், அவரது மனைவியும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் மனைவியின் கண் முன்பு பாலகுமார் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி காயத்துடன் உயிர் தப்பினார்.

அவர் 2 மாதத்துக்கு முன் திருமணமாகி தன்னுடன் சந்தோசமாக வாழ்ந்த கணவர் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தார். அவர் கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் பாலகுமாரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Tags:    

Similar News