செய்திகள்

கனமழை எதிரொலி: செங்கல் உற்பத்தி, ரப்பர் பால் வெட்டும் பணி பாதிப்பு

Published On 2017-11-30 05:50 GMT   |   Update On 2017-11-30 05:50 GMT
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக செங்கல் உற்பத்தி, ரப்பர் பால் வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன் புதூர் உள்பட பல பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் செங்கல் சூளைகளில் பணியாற்றி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக செங்கல் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சூளையில் வைப்பதற்கு தயார் நிலையில் இருந்த செங்கல்களும் மழை காரணமாக கரைந்து சேதம் அடைந்தது.

இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து தங்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

இதைபோல குலசேகரம், திற்பரப்பு, மார்த்தாண்டம், குழித்துறை உள்பட மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன.

இங்கு பெய்து வரும் கனமழை காரணமாக ரப்பர் மரங்களில் இருந்து ரப்பர் பால் வெட்டும் பணி நடைபெறவில்லை. மேலும் ரப்பர் பால் சேகரிப்புக்காக மரங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த சிரட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் தொழிலாளர்களும் பால் வெட்டும் பணிக்கு செல்லவில்லை.

தோவாளையில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பூக்கள் ஏராளமாக இந்த மார்க்கெட்டுக்கு தினசரி கொண்டு வரப்படும்.

உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் தோவாளை மார்க்கெட்டிற்கு வந்து போட்டி போட்டு பூக்களை வாங்கிச் செல்வார்கள். இன்று முகூர்த்த நாள் என்பதால் வியாபாரிகள் அதிகளவு பூக்கள் விற்பனை ஆகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் தோவாளை மார்க்கெட்டிற்கு பூக்கள் வரவில்லை. இதனால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

இன்று ஒரு நாளில் மட்டும் ரூ.5 லட்சம் வரை பூக்கள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News