செய்திகள்
நிவேதா

கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்றதால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Published On 2017-11-30 09:57 IST   |   Update On 2017-11-30 09:57:00 IST
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்றதால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கண்ணூர் காசர் கோடு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி சதி. இவர்களது மகள் நிவேதா (14). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த வாரம் பள்ளியில் மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. இதில் கணக்கு பாடத்தில் மாணவி நிவேதா குறைவான மதிப்பெண் எடுத்தார். இதனால் மனம் உடைந்த அவர் தனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் தான் கணக்கு பாடத்தில் குறைவாக மதிப்பெண் பெற்றதை கூறி வருத்தப்பட்டார்.

இதையடுத்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் தெரிவித்தனர். ஆனாலும் மாணவி நிவேதா மனம் உடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று காலை வெகுநேரமாகியும் மாணவி நிவேதா தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சென்று பார்த்த போது மாணவி நிவேதா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து காசர்கோடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Similar News