செய்திகள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வேட்பாளரை வெற்றி பெற வைக்க பாடுபடுவோம்: ஈஸ்வரன் பேட்டி

Published On 2017-11-26 13:44 IST   |   Update On 2017-11-26 13:44:00 IST
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற வைக்க பாடுபடுவோம் என்று கொ.ம.தே.க.ஈஸ்வரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஈரோடு:

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு கிடைத்திருப்பது எதிர்பார்த்ததுதான். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அதை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எதிர்ப்பார்கள்.

அதேபோல ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரான மதுசூதனனை நிறுத்தினால் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பார்.

ஆகவே இந்த இரு அணியினருக்கும் ஒற்றுமை இல்லாத பட்சத்தில் மக்கள் இவர்களை நிச்சயமாக ஆதரிக்கமாட்டார்கள். சின்னத்தை வைத்து மக்கள் ஓட்டு போடும் காலம் மாறி விட்டது. மக்கள் இப்போது தெளிவாக உள்ளனர்.

ஆளும் கட்சியினரின் செயல்பாடுகள் மக்களுக்கு பிடிக்கவில்லை. மக்கள் அவர்களை புறக்கணிக்க தொடங்கிவிட்டனர். ஆகவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு பெரிய மாற்றத்தை கொடுக்கும்.

ஆர்.கே. நகர் தேர்தலை தள்ளி வைத்து 8 மாதமாகியும் அவர்கள் தேர்தல் நடத்த ஏதாவது முயற்சி செய்தார்களா? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? எதுவும் கிடையாது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்கள் ஆதரவு தி.மு.க. வேட்பாளருக்குதான். தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றி பெற பாடுபடுவோம்.

இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.

Similar News