பணமதிப்பு நீக்கத்துக்கு எதிர்ப்பு: கோபியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
ஈரோடு:
கடந்த நவம்பர் மாதம் இதே நாளில் (8-ந் தேதி) ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அறிவித்தது. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி, தொழில் முடக்கம், வேலை இழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாக காங்கிரஸ், தி.மு.க. மற்றும் தேசிய அளவிலான எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.
எனவே இன்று நவம்பர் 8-ந் தேதி தேசிய அளவில் கருப்பு தினமாக எதிர் கட்சிகள் அறிவித்தது.
இதை கண்டித்து தமிழகத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கருப்பு தினமாக அறிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதே போல ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள ஜவான்பவான் முன்பு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் தி.மு.க. தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி மற்றும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தெண்டர் பல பலர் கலந்து கொண்டனர்.
அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் கோபி பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் மற்றும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் உள்பட தி.மு.க. காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.