செய்திகள்

நெல்லை அருகே ஒரு தலை காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

Published On 2017-11-06 14:23 IST   |   Update On 2017-11-06 14:23:00 IST
நெல்லை அருகே இன்று அதிகாலை ஒரு தலை காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள சிவலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 38). சிவகிரி மேலரதவீதியைச் சேர்ந்தவர் காளிராஜ் (42). பெட்டிக்கடை நடத்தி வரும் இவர் வீடு, வீடாக பால்பாக்கெட்டும் வினியோகம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு காளிராஜ் வழக்கம் போல பால்போடச் சென்றார். அவர் சிவகிரி-விஸ்வநாதபேரியில் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த காளிமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் சுதாரித்துக்கொண்ட காளிராஜ் காளிமுத்து கையில் இருந்த அரிவாளை பிடிங்கி அவரை வெட்டினார். இதில் காளிமுத்து தலை கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

காளிமுத்து வெட்டியதில் காளிராஜிக்கு கை, கால்களில் காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சிவகிரி இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி ஆகியோர் விரைந்து வந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் கொலை செய்யப்பட்ட காளிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்து காளிமுத்து கொலை செய்யப்பட்டது ஏன் என விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல் வெளியானது. அதன் விபரம் வருமாறு:-

காளிமுத்துவும் காளிராஜின் மனைவி கற்பகமும் பள்ளியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். அப்போது இருந்தே காளிமுத்து கற்பகத்தை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் காளிமுத்து கற்பகத்தை பெண் கேட்டு சென்ற போது அவரது பெற்றோர் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர். மேலும் சில மாதங்களில் கற்பகத்தை அவரது பெற்றோர் காளிராஜூக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். இதனால் காதலி தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு காளிராஜ் வீட்டுக்குள் புகுந்த காளிமுத்து கற்பகத்தை அரிவாளால் வெட்டினார்.

இச்சம்பவம் தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவை சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்து கடந்த வருடம் வெளிவந்த காளிமுத்து தனது காதலியின் கணவரான காளிராஜை கொலைசெய்ய திட்டம் தீட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் தான் இன்று காலை காளிராஜை கொலை செய்யும் நோக்கில் அரிவாளுடன் வந்த காளிமுத்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News