செய்திகள்

மாணவி அனிதா தற்கொலை: கடலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்

Published On 2017-09-02 16:10 IST   |   Update On 2017-09-02 16:10:00 IST
அரியலூர் மாணவி அனிதா தற்கொலையை கண்டித்து கடலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்:

நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

இதையொட்டி மத்திய, மாநில அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் முல்லை வேந்தன் தலைமையில் நிர்வாகிகள் கடலூர் திருப்பாதிரிப் புலியூர் உழவர் சந்தை அருகே திரண்டனர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கடலூர் திருப்பாதிலிப்புலியூர் அண்ணாபாலம் அருகே சென்று சாலை மறியல் செய்தனர்.

போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று போலீசார் கூறினார்கள். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்திய 40 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்த சாலைமறியலால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விக்கிரவாண்டியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தாலுகா அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக பஸ்நிலையம் வந்தனர். அங்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மறியல் செய்தனர். இதையொட்டி 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் சேரலாதன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

செய்தி தொடர்பாளர் தமயந்தி, தொகுதி செயலாளர் தமிழ்மாறன், தொகுதி துணை செயலாளர் பெரியார், நகர செயலாளர் சரவணன், இரணியன், முகாம் அமைப்பாளர் காசிலிங்கம் மற்றும் நிர்வாகிகள் திலீபன், இரணியன் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் சாலைமறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Similar News