செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 3 பேர் சிறைப்பிடிப்பு

Published On 2017-07-25 04:07 GMT   |   Update On 2017-07-25 04:07 GMT
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் சிறைப்பிடித்தனர்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 146 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் நேற்று இரவு இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் அங்கு மின்னல் வேகத்தில் வந்தது.

இதைப்பார்த்ததும் புதுக்கோட்டை மீனவர்கள் அச்சத்துடன் அங்கிருந்து வலைகளை சுருட்டிக் கொண்டு புறப்பட தயாரானார்கள். ஆனால் அதில் ஷாஜகான் என்பவருக்கு சொந்தமான படகை சுற்றி வளைத்தனர். படகில் ஏறிய கடற்படையினர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்களை சரமாரியாக தாக்கினர்.

பின்னர் அந்த படகில் இருந்த கணேசன், வடிவேலு, இருளாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

சிறைப்பிடிக்கப்பட்ட 3 மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகை இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகாம் அலுவலகத்திற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இன்று பிற்பகலில் அவர்கள் இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னரே அவர்கள் விடுதலையாவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரிய வரும்.

கடந்த வாரம் நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் அருகே சிறைப்பிடிக்கப்பட் டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 வாரங்களில் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News