செய்திகள்

காரைக்குடி அருகே இன்று ஆம்னி வேன்-கார் மோதல்: சகோதரர்கள் உடல் நசுங்கி பலி

Published On 2017-07-17 10:19 GMT   |   Update On 2017-07-17 10:19 GMT
ஆம்னி வேன்-கார் மோதிய விபத்தில் சகோதரர்கள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி:

தேவகோட்டை அருகே உள்ள சிறுவனூரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது34). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி ராதிகா (34), மகன்கள் தீபக்ராஜ் (9), திலீப்ராஜ் (4), தீபன்ராஜ் மற்றும் சகோதரர்கள் காமேஷ் (25), பிரகாஷ் (20), உறவினர்கள் அழகர், சரண்யா (28) ஆகியோருடன் ஆம்னி வேனில் பெங்களூரு சென்றார்.

நேற்று அங்கிருந்து மீண்டும் குடும்பத்துடன் வேனில் ஊருக்கு புறப்பட்டார். இன்று அதிகாலை 5 மணி அளவில் தேவகோட்டை அருகே உள்ள திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்தது.

அப்போது ஒரு கார் சர்வீஸ் ரோட்டில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. இதை கவனிக்காத ஆம்னி வேன், கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 வாகனங்களும் சில அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு தலைகுப்புற கவிழ்ந்தன.

வேன் மற்றும் காரில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். விபத்தில் வேனில் இருந்த காமேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயங்களுடன் கிடந்த தியாகராஜன் குடும்பத்தினர் 8 பேர் மற்றும் காரில் வந்த பெரியசாமி (23), ஜெயபால் (49) ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News