செய்திகள்

விபத்தில் கால் முறிந்தவருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முதல் உதவி சிகிச்சை

Published On 2017-07-10 15:57 IST   |   Update On 2017-07-10 15:57:00 IST
விபத்தில் சிக்கியவருக்கு தாமே முன்வந்து உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளித்த அமைச்சர் விஜயபாஸ்கரை பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.

சென்னை:

அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரில் திடீரென இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது.

அந்த விபத்தில் புதுக்கோட்டை ராஜகோபால புரத்தைச் சேர்ந்த அடைக்கலம் (வயது60) என்பவருக்கு படுகாயம் அடைந்து கால் முறிவு ஏற்பட்டது.

இதனை கண்ட அமைச்சர் உடனடியாக காரில் இருந்து இறங்கி, சாலை விபத்தில் சிக்கி கால் முறிந்த நிலையில் காயமடைந்தவரை தனது காரில் இருந்த தலையணையைக் கொண்டு இறுகக் கட்டி முதல் உதவி சிகிச்சை அளித்தார்.

மேலும் தனது பாதுகாப்பு வாகனத்தில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். புதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை டாக்டர்களை தொலைபேசியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பு கொண்டு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உடனடியாக மேல் சிகிச்சை செய்யுமாறு உத்தரவிட்டார்.

விபத்தில் சிக்கியவருக்கு தாமே முன்வந்து உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளித்ததை கண்டு அருகில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அமைச்சரை வெகுவாக பாராட்டினர்.

Similar News