செய்திகள்
பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது எடுத்தபடம்.

வேப்பூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்: பொதுமக்கள்- போலீசார் மோதல்

Published On 2017-05-31 10:54 GMT   |   Update On 2017-05-31 10:54 GMT
வேப்பூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நல்லூரில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

அவர்களிடம் விரைவில் டாஸ்மாக் கடையை மூடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கடையை மூடவில்லை.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நல்லூர் வட்டார செயலாளர் அசோகன், இந்திய மாணவர் சங்க வட்ட செயலாளர் ராயர் ஆகியோர் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நல்லூரில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக வந்தனர். டாஸ்மாக் கடை அருகே வந்த அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கலால் தாசில்தார் ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், 2 நாளில் நல்லூரில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையில் மாலை 4 மணி அளவில் திடீரென அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News