செய்திகள்

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட விருத்தாசலம் கோவில் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு

Published On 2017-05-30 15:00 IST   |   Update On 2017-05-30 15:00:00 IST
ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட விருத்தாசலம் கோவில் சிலை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிரத்யங்கராதேவி சிலையை, கும்பகோணம் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்திப்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் இருந்த அர்த்தநாரீஸ்வரர், பிரத்யங்கராதேவி, கணபதி, ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி ஆகிய 6 சாமி கற்சிலைகளை 2002-ம் ஆண்டு மர்மமனிதர்கள் திருடி ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி சென்றனர். சுமார் 1,400 ஆண்டுகள் பழமையான இந்த சிலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.10 கோடி ஆகும்.

இது தொடர்பாக தமிழக சிலை கடத்தல் பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் 6 சிலைகளும் ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முதலில் அர்த்தநாரீஸ்வரர் சிலை மட்டும் மீட்கப்பட்டு, கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்த பிரத்யங்கராதேவி சிலையும் மீட்கப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டது. இந்த சிலையை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்னையில் இருந்து தனி வாகனத்தில் விருத்தாசலம் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

இந்த சிலையை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் பார்வையிட்டார்.

பின்னர் பிரத்யங்கராதேவி சிலையை, கும்பகோணம் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்படி அந்த சிலையை போலீசார் கும்பகோணத்துக்கு வாகனத்தில் கொண்டு சென்றனர்.

Similar News