வடலூரில் தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் ரவி என்கிற ரவிச்சந்திரன் (வயது 44). தி.மு.க. பிரமுகரான இவர் வடலூர் பேரூராட்சி 17-வது வார்டு தி.மு.க. செயலாளராக இருந்தார். அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார்.
நேற்று இரவு ஓட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள மருந்து கடைக்கு சென்று மாத்திரை வாங்கினார். அந்த கடையின் முன்பு நின்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது 6 பேர் அங்கு வந்தனர். ரவிச்சந்திரனை சுற்றிவளைத்தனர் அந்த கும்பலிடமிருந்து ரவிச்சந்திரன் தப்பிசெல்ல முயற்சி செய்தார். அவர்கள் விடவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு தலை உள்பட உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் பட்டது அவர் மயங்கி விழுந்தார். ரவிச்சந்திரன் இறந்த விட்டதாக நினைத்த அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரவிச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக வடலூர் போலீசில் புகார் செய்யப்பட் டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரவிச்சந்திரன் முன்பு வடலூரில் மதுக்கடை பார் நடத்தி வந்தார். பார் நடத்தும்போது அவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
அதில் மர்ம நபர்களால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.