செய்திகள்

கொடிவேரிஅணையில் மூழ்கி கோவை வாலிபர் பலி

Published On 2017-05-08 16:02 IST   |   Update On 2017-05-08 16:02:00 IST
கோபி அருகே கொடிவேரிஅணையில் நண்பர்களுடன் குளித்த கோவை வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:

கோவை காந்திபுரத்தில் உள்ள செல்போன் கடை ஒன்றில் பணிபுரிந்தவர் விக்னேஷ் (வயது 23). இவரும் அதே கடையில் பணிபுரியும் சக ஊழியர்கள் 4 பேரும் என மொத்தம் 5 பேர் நேற்று விடுமுறை என்பதால் மோட்டார் சைக்கிளில் சுற்றுலா புறப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபி வந்த அவர்கள் பிறகு அருகே உள்ள கொடிவேரி அணைக்கு சென்றனர். அங்கு தண்ணீர் அருவிபோல் கொட்டி கொண்டிருந்தது.

பவானிசாகர் அணையிலிருந்து ஆற்றுக்கு குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இதை கண்ட நண்பர்கள் 5 பேருக்கும் அணையில் குளிக்க ஆசை ஏற்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் அணையில் குளித்துக் கொண்டிருந்தனர்.

இதில் 4 பேர் குளித்து விட்டு கரைக்கு திரும்பினர். ஆனால் விக்னேஷ் மட்டும் வரவில்லை. இதனால் நண்பர்கள் தவித்தனர். கதறி அழுதனர்.

அணையின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததால் விக்னேஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பங்காளபுதூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர். அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் விக்னேஷ் உடலை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

இன்று (திங்கட்கிழமை) காலை 2-வது நாளாக உடலை தேடினர். அப்போது குளித்த இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி கரையில் விக்னேஷ் உடல் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது.

போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News