செய்திகள்

2 அணியினரும் இணைந்து இரட்டை இலைசின்னத்தை மீட்க வேண்டும்: தோப்பு வெங்கடாச்சலம்

Published On 2017-05-02 17:16 IST   |   Update On 2017-05-02 17:16:00 IST
கருத்து வேறுபாட்டை மறந்து 2 அணியினரும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.
பெருந்துறை:

பெருந்துறையில் அ.தி.மு.க.சார்பில் மே தின விழா நடந்தது. இதையொட்டி பெருந்துறை கட்சி அலுவலகத்தில் இருந்து மே தின பேரணி தொடங்கியது.

இதில் முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து நடந்து சென்றார். பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று பழைய பஸ் நிலையத்தை அடைந்தது. அங்கு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தை பீடு நடை போட்டு கொண்டு சென்றது. ஜெயலலிதாவின் திட்டங்களை இந்தியாவே உற்று கவனித்தது. அப்படி ஒரு சிறந்த ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது உள்ள சூழ்நிலை கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.

இப்போது உள்ள நிலையில் அ.தி.மு.க.வை நாம் காப்பாற்ற வேண்டும். பிரிந்தவர்கள் மீண்டும் சேர வேண்டும். இரு அ.தி.மு.க. அணிகளும் ஓரணியில் இணைய வேண்டும்.

இப்போது புரட்சித்தலைவி மீட்டெடுத்த இரட்டை இலை சின்னத்தை காப்பாற்ற வேண்டும். அ.தி. மு.க. மீண்டும் வலுபெற வேண்டும். அதற்காக இரு அணி தலைவர்களும் பிரமுகர்களும் தங்களுக்குள் உள்ள கருத்து வேறு பாட்டை மறந்து விருப்பு வெறுப்பை துறந்து இணைந்து செயல்பட்டு புரட்சித்தலைவியின் இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். இதை அனைவரும் லட்சியமாக கொண்டு செயல்பட வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து 4 ஆண்டுகள் நீடிக்கும். அடுத்த தேர்தலிலும் மற்ற கட்சிகளை தலை தூக்கவிடாமல் அ.தி.மு.க.வே மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும். இதுதான் எனது ஆசை.

இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் பேசினார்.

Similar News

வடம்- Movie Review