செய்திகள்

பெரியபாளையம் அருகே கொசஸ்தலை ஆற்றில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி

Published On 2017-04-12 04:18 GMT   |   Update On 2017-04-12 04:18 GMT
பெரியபாளையம் அருகே கொசஸ்தலை ஆற்றில் டிராக்டர் கவிழ்ந்ததில் 2 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள பெருமுடிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50) டிராக்டர் டிரைவர்.

இவர் நேற்று மாலை கல்மேடு பகுதியில் உள்ள செங்கல் தொழிற்சாலையில் இருந்த மரத்துண்டுகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு பூச்சி அத்திப்பேடு நோக்கி சென்றார்.

மரத்துண்டுகள் மீது செங்கல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் குமரன், பார்த்தீபன், மனோகரன் ஆகியோர் இருந்தனர்.

கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் அவ்வழியே டிராக்டரை ஓட்டிச் சென்றனர். அப்போது டிராக்டரின் முன்பக்க சக்கரம் திடீரென உடைந்து கழன்று ஓடியது.

இதில் டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளிகள் குமரன், பார்த்தீபன், மனோகரன் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் போகும் வழியிலேயே குமரன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பலியான வெங்கடேசனுக்கு ராணி என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். குமரனுக்கு மனைவியும் 2 வயதில் குழந்தையும் இருக்கிறார்கள்.

இதுகுறித்து பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News