செய்திகள்

கொடைரோடு - வேடசந்தூரில் மதுக்கடைக்கு எதிராக பள்ளி குழந்தைகளுடன் பொதுமக்கள் போராட்டம்

Published On 2017-04-10 12:13 GMT   |   Update On 2017-04-10 12:26 GMT
கொடைரோடு மற்றும் வேடசந்தூரில் மதுக்கடைக்கு எதிராக பள்ளி குழந்தைகளுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கொடைரோடு:

திண்டுக்கல் அருகில் உள்ள கொடைரோடு பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை கோர்ட்டு உத்தரவுபடி அகற்றப்பட்டது. இதனையடுத்து அம்மைய நாயக்கனூர் கிழக்கு பகுதியில் தோட்டத்து சாலையில் புதிய கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் இன்று கடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதை அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பள்ளி குழந்தைகள் சீருடையுடன் வந்து கலந்து கொண்டனர். அவர்கள் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வாசகங்களை கையில் வைத்திருந்தனர்.

பொதுமக்களிடம் அம்மையநாயக்கனூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் அவர்கள் கடை அமைக்கும் முடிவை கைவிட்டால்தான் நாங்கள் இந்த இடத்தை விட்டு செல்வோம் என்று உறுதியாக தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது.

இதே போல வேடசந்தூரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைக்கு பதிலாக தம்மனம்பட்டியில் புதிய கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த கடையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின்னர் மாவட்ட கலெக்டரிடம் இது குறித்து மனு அளிக்கப் போவதாகவும் கூறினர்.

Similar News