செய்திகள்

மனைவியிடம் அடிக்கடி பேசியதால் இளநீர் வியாபாரி வெட்டி படுகொலை

Published On 2017-04-02 17:25 IST   |   Update On 2017-04-02 17:25:00 IST
பவானிசாகர் அருகே மனைவியிடம் அடிக்கடி பேசியதால் இளநீர் வியாபாரியை வெட்டி கொலை செய்த கொலையாளி போலீசில் சரண் அடைந்தார்.

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 55) இளநீர் வியாபாரி. சண்முகம் தோட்டங்களுக்கு சென்று மொத்தமாக இளநீர் வாங்கி ஒவ்வொரு பகுதிக்கும் இருசக்கர வாகனத்தில் சென்று சாலையோரம் போட்டு விற்பனை செய்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் இளநீர் வியாபாரம் செய்ய சென்ற சண்முகத்தை கொலையாளி வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டான்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இளநீர் வியாபாரி சண்முகத்தை வெட்டி கொலை செய்த மூர்த்தி என்பவர் இக்கரை தத்தப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் முன் சரண் அடைந்தார். தான்தான் இளநீர் வியாபாரி சண்முகத்தை வெட்டி கொலை செய்தேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்தான் மூர்த்தி. இவரது மனைவி பெயர் சரஸ்வதி.

சரஸ்வதியிடம் இளநீர் வியாபாரி சண்முகம் அடிக்கடி பேசுவாராம். மேலும் செல்போனிலும் இருவரும் பேசிக் கொண்டிருப்பார்களாம்.

இதை கண்காணித்த மூர்த்திக்கு தன்மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. சண்முகம் மீது கடும் ஆத்திரம் அடைந்தார்.

இதையொட்டி சம்பவத்தன்று வியாபாரத்துக்காக சென்ற சண்முகத்தை மூர்த்தி மறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சரண் அடைந்த மூர்த்தியை பவானி சாகர் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News