தமிழர் நலனுக்காக 2 முறை ஆட்சியை இழந்தவர் கருணாநிதி: பழ.கருப்பையா பேச்சு
ஈரோடு:
ஈரோடு மணல்மேட்டில் தி.மு.க. சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பழ.கருப்பையா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தனது வாழ்நாளில் கொள்கைகளை மக்களிடம் பரப்பி அதை நிறைவேற்றி கண்டுகளித்தவர் தந்தை பொயார். சுருங்கி போன தமிழை கடும் முயற்சிக்கு பிறகு பரப்பி வளர செய்தவர் அண்ணா.
தமிழ்நாட்டின் ஜனநாயகத்தை நிலை நாட்ட ஒரு முறையும், இலங்கை தமிழர்களுக்காக ஒரு முறையும் ஆட்சியை இழந்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
ஆனால் சொத்து குவிப்பு வழக்கு உள்பட 2 வழக்குகளில் 2 முறை ஜெயிலுக்கு சென்றவர் ஜெயலலிதா. இந்த வேறுபாட்டை பொதுமக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச் சாலையில் அனுபவித்த கொடுமையையும் கருணா நிதியின் மகன் என்ற பெருமையையும் ஒன்றாக நினைக்கும் மன சம நிலை பெற்று உள்ளதால் தான் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார்.
காவிரிக்காக 22 ஆண்டு காலம் போராடி வருகிறோம். காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம் அமைக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் பிரதமர் மோடி அதை நிறைவேற்ற விடாமல் கர்நாடத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக தொழில் நுட்ப குழுவை அனுப்பி ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
தமிழர்களின் பண் பாட்டை பாதுகாக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தி வீர விளையாட்டை நிலை நிறுத்த வேண்டும் என்று சென்னை மொனாவில் லட்சக்கணக்கான மாணவர்கள்- இளைஞர்கள் திரண்டனர்.
இது போல தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற தமிழ் தேசியம் தலை தூக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.