செய்திகள்
கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஈஸ்வரன் பேசியபோது எடுத்த படம்.

அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும்: ஈஸ்வரன்

Published On 2017-03-27 12:15 IST   |   Update On 2017-03-27 12:15:00 IST
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்து விரைவில் தேர்தல் வரும் என ஈரோட்டில் ஈஸ்வரன் பேசியுள்ளார்.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் பொதுகூட்டம் நடந்தது.

மேற்குமாவட்ட செயலாளர் சிவராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் ராமர் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை. பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு தவறிவிட்டது.

சசிகலாவிடமிருந்து ஒ.பி.எஸ். பிரிந்து உள்ளார். அவருக்கு முன்பாகவே இப்போது உள்ள கல்வித்துறை அமைச்சரும் இத்தொகுதி (கோபிசெட்டிபாளையம்) சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் சசிகலாவை விட்டு பிரிந்திருந்தால் நாங்கள் முதல் ஆளாக சென்று மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்திருப்போம்.

சசிகலா படத்தை பயன்படுத்தவே அந்த அணியினர் தயக்கம் காட்டிவருகிறார்கள். சசிகலா படத்தை முன்னிலைப்படுத்த அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்பவில்லை. பொதுமக்களும் இதை ஏற்க மாட்டார்கள்.

இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் ஆளும் கட்சி விரைவில் கவிழும். தமிழகத்துக்கு விரைவில் தேர்தல் வரும். எனவே இப்போதே தேர்தலுக்கு நம் கட்சியினர் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் மட்டுமல்ல மக்கள் எதிர்பார்ப்புபடி தி.மு.க.வே ஜெயிக்கும். தி.மு.க. வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ஆளும் கட்சி வேட்பாளரோ அவரது கட்சியின்பொதுச்செயலாளர் சசிகலா படத்தையே காட்ட முடியாத சூழ்நிலையில் உள்ளார்.

இவ்வாறு ஈஸ்வரன் பேசினார்.

Similar News