செய்திகள்

கடலூர் துறைமுகம் அருகே கடலில் விடப்பட்ட 253 ஆமை குஞ்சுகள்

Published On 2017-03-23 10:19 GMT   |   Update On 2017-03-23 10:19 GMT
ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்கள் ஆமைகளின் இனப்பெருக்க காலம். எனவே கடலூர் துறைமுக கடலில் 253 ஆமை குஞ்சுகள் விடப்பட்டன.

கடலூர்:

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்கள் ஆமைகளின் இனப்பெருக்க காலம். இந்த கால கட்டத்தில் ஆமைகள் கடலோர பகுதிகளில் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது வழக்கம்.

இந்த முட்டைகள் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளால் சேதம் அடையாமல் இருக்கவும், ஆமை இனங்கள் அழிவதை தடுக்கவும் கடலூர் வனத்துறை அதிகாரிகள் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சொத்திக்குப்பம் கடலோர பகுதியில் ஆமை முட்டைகளை பாதுகாப்பதற்காக பொரிப்பகம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர்.

கடலோர பகுதிகளில் ஆமைகள் இட்டு செல்லும் முட்டைகளை சேகரித்து இந்த பொரிப்பகத்துக்கு எடுத்து வந்து அங்குள்ள 35 குழிகளில் முட்டைகளை பாதுகாத்து வைக்கின்றனர். 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் முட்டையில் இருந்து ஆமைகுஞ்சுகள் வெளிவந்ததும் அவற்றை எடுத்து வனத்துறையினர் கடலில் விட்டு வருகின்றனர்.


அந்த வகையில் கடலூர் மாவட்ட வனத்துறை அதிகாரி சவுந்தரராஜன், வனச்சரகர்கள் அப்துல் அமீது, ராஜேந்திரன், வன காப்பாளர் ஆதவன் ஆகியோர் சுமார் 4 ஆயிரம் ஆமை முட்டைகளை சேகரித்து, சொத்திக்குப்பத்தில் உள்ள பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இதில் 253 முட்டைகளில் இருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் பிடித்து நேற்று கடலில் விட்டனர்.

இந்த ஆண்டு இதுவரை 1,613 முட்டைகளில் இருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Similar News