செய்திகள்
கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதி திடீர் உடல்நல குறைவால் உயிர் இழந்தார்.
மதுரை:
மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது மர்ம ஆசாமி வீட்டிற்குள் புகுந்து ராஜலட்சுமியை குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவம் குறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (வயது 25) என்ற வாலிபரை கைது செய்து மதுரை ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கணேசனுக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிர் இழந்தார்.
இது குறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் கணேசன் நெஞ்சுவலியால் இறந்தாரா அல்லது வேறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.