செய்திகள்
ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வு மையத்தை கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.

ஈரோடு தேர்வு மையத்தை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்

Published On 2017-03-08 11:31 IST   |   Update On 2017-03-08 11:31:00 IST
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார்.
ஈரோடு:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தமிழகம் முழுவதும் தொடங்கி நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 355 பள்ளிகளை சேர்ந்த 27 ஆயிரத்து 208 மாணவ-மாணவிகள் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதினர்.

பரீட்சை தொடங்குவதற்கு முன் மாணவ- மாணவிகள் கோவில்களில் சென்று தேர்வு எழுத உள்ள பேனாக்களை சாமிமுன் வைத்து வழிபட்டனர். பிறகு தங்களது பெற்றோர் காலில் விழுந்து ஆசிபெற்றனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார். அப்போது தேவையான அடிப்படைவசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என கேட்டறிந்தார்.

அப்போது மாவட்ட கலெக்டர் பிரபாகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், செல்வகுமார சின்னையன் எம்.பி. ஆகியோர் உடனிருந் தனர்.

தேர்வுமையத்தை பார்வையிட்ட அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் 3371 தேர்வு மையங்களில் 10 லட்சத்து 33 ஆயிரத்து 908 மாணவ-மாணவிகள் பரீட்சை எழுதி வருகிறார்கள். தமிழ் அல்லாத பிற மொழி பாடங்களில் 7327 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறுவது தவறு. அரசியல் லாபத்துக்காக இவ்வாறு பொய்யான தகவலை கூறுகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் 355 பள்ளிகளை சேர்ந்த 27208 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதுகிறார்கள். 89 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுகிறார்கள். மாவட்டம் முழுவதும் தேர்வை 176 பறக்கும் படையினர் கண்காணித்து வருகிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Similar News