செய்திகள்

பண்ணாரி வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2017-02-28 15:41 IST   |   Update On 2017-02-28 15:42:00 IST
ஈரோட்டில் பண்ணாரி அம்மன் கோவிலை சுற்றி உள்ள வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் நேற்று முதல் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. சத்தியமங்கலம் வனப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு அங்கு புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

பொதுவாக தலமலை, ஆசனூர், கேர்மாளம் மற்றும் தெங்குமரகடா செல்லும் வனம் ஆகிய அடர்ந்த காடுகளில் புலிகள் நடமாட்டம் முன்பு காணப்பட்டது.

ஆனால் தற்போது பண்ணாரி அம்மன் கோவிலை சுற்றி உள்ள வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

நேற்றும் இன்றும் பண்ணாரி வனப்பகுதியில் புகுந்து வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் பல இடங்களில் புலிகளின் கால்தடத்தை பார்த்து உள்ளனர். இப்புலிகள் அப்பகுதியில் நடமாடும் மான்கள் மற்றும் காட்டு பன்றிகளை வேட்டையாடி வனசோதனை சாவடி அருகே உள்ள தடுப்பணையில் உள்ள தண்ணீரை குடித்து அங்கேயே முகாமிட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதாகவும் இரை மற்றும் தண்ணீருக்காக பண்ணாரி காட்டுக்கு புலிகள் இடம் பெயர்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Similar News