செய்திகள்

கடம்பூர் வனப்பகுதியில் 3-வது நாளாக எரியும் காட்டு தீ

Published On 2017-02-23 18:01 IST   |   Update On 2017-02-23 18:01:00 IST
கடம்பூர் வனப்பகுதியில் 3-வது நாளாக எரியும் காட்டு தீயை வனத்துறையினர் அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி உள்ளது கடம்பூர் வனப்பகுதி. இந்த வனத்தில் உள்ள கம்பத்ராயன் மலை பகுதியில் நேற்று முன்தினம் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது. கோடையையொட்டி வனப்பகுதி காய்ந்து கிடப்பதால் வனப்பகுதியில் உள்ள மூங்கில், புங்கமரங்கள், செடிகொடிகள்யாவும் கொழுந்துவிட்டு எரிகிறது.

இன்று (வியாழக்கிழமை) 3-வது நாளாக காட்டு தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது. இதில் வனப்பகுதியில் உள்ள யானை, காட்டெருமைகள் வேறு இடத்துக்கு சென்றுவிட்டன. மான்கள், செந்நாய்கள், குரங்கு போன்ற வன விலங்குகள் தீயின் ஜுவாலைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இறந்து வருகிறது.

வனச்சரகர் ஜான்சன் தலைமையில் வனவேட்டை தடுப்பு காவலர்கள் 50 பேர் அங்கு முகாமிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பச்சை மரக்கிளைகளை வெட்டி எரியும் தீயில் போட்டு அணைத்து வருகிறார்கள். அவர்களின் தொடர் முயற்சியால் கம்பத் ராயன் மலையில் காட்டுதீ இன்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் மீதி எரியும் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் காட்டிலும் காட்டுதீ பிடித்து எரிந்து வருகிறது.

இப்பகுதியில் பிடித்த தீ கர்நாடக மாநிலம் எல்லையான புளிஞ்சூர் வரை காட்டு தீ எரிந்து கொண்டிருக்கிறது. இப்பகுதியில் எரியும் தீயையும் வனத்துறையினர் போராடி கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

Similar News