செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்

Published On 2017-02-22 13:41 IST   |   Update On 2017-02-22 13:41:00 IST
தி.மு.க.செயல் தலைவரும், சட்டசபை எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
கடலூர்:

தமிழக சட்டசபையில் கடந்த 18-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடந்தது.

அப்போது தி.மு.க.செயல் தலைவரும், சட்டசபை எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்தும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை தீர்மானம் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும் தி.மு.க.சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இள.புகழேந்தி, துரைசரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நந்தகோபால கிருஷ்ணன், குழந்தை தமிழரசன், மாவட்ட பொருளாளர் பாவாடை கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார். அமைப்பு செயலாளர் பாரதி கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

உண்ணாவிரதத்தில் ஒன்றிய செயலாளர்கள் அமிர்தலிங்கம், சின்னசாமி, செங்குட்டுவன் மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News