செய்திகள்

சோழிங்கநல்லூர் அருகே 30 வீடுகள் எரிந்து சாம்பல்

Published On 2017-02-16 15:08 IST   |   Update On 2017-02-16 15:08:00 IST
சோழிங்கநல்லூர் அருகே தீ விபத்தில் 30 வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா, அல்லது நாசவேலை காரணமா? என்று செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவான்மியூர்:

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி, பாண்டிச்சேரி பாட்டை சாலையில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு வடமாநில கட்டிட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார்கள்.

நேற்று இரவு ஒரு குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.

தகவல் அறிந்ததும் சிறுசேரி, துரைப்பாக்கம், திருவான்மியூர் பகுதியில் இருந்து 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும் அங்கிருந்த 30 குடிசைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தது. தீ விபத்து ஏற்பட்டதும் அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறியதால் உயிர் தப்பினர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா, அல்லது நாசவேலை காரணமா? என்று செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News