செய்திகள்

ஜவுளி கடை அதிபர் மனைவி- மகளுடன் தற்கொலை

Published On 2017-02-09 06:58 GMT   |   Update On 2017-02-09 06:58 GMT
ஈரோட்டில் கடை அதிபர் மனைவி மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு என்.ஜி. ஜி.ஓ.காலனியில் உள்ள உழவன் நகரை சேர்ந்தவர் ரவிசந்திரன்(வயது53). ஜவுளிவியாபாரி. இவரது மனைவி மாலதி(47). இவர்களுக்கு கீர்த்தனா(19) என்ற மகள் உள்ளார்.

ரவிசந்திரன் ஈஸ்வரன் கோவில் வீதியில் சொந்தமாக ஜவுளிக்கடை வைத்துள்ளார். கீர்த்தனா ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் தூங்க சென்று விட்டனர்.

இன்று காலை மாலதி வீட்டுக்கு அவரது தங்கை கணவர் வந்தார். வீட்டு கதவு தாழ்பாள் போடாமல் பாதி பூட்டிய நிலையில் இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் சென்று பார்த்தார். அவர் கண்ட காட்சி பதற வைத்தது. வீட்டின் படுக்கை அறையில் ரவிசந்திரனும், மாலதியும், கீர்த்தனாவும் இறந்து கிடந்தனர்.

இது குறித்து அவர் சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரவிசந்திரன், மாலதி, கீர்த்தனா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மூன்று பேரும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டனர்? என்று உடனடியாக தெரியவில்லை. ஜவுளி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ரவிசந்திரன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டனரா? என்று தெரியவில்லை.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ரவிசந்திரன் உறவினர்கள் திரண்டு அழுத காட்சி பார்ப்போரை பரிதாப பட வைத்தது.

இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News