செங்கல்பட்டு அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்தது: கணவன்,மனைவி-மகள் பலி
செங்கல்பட்டு:
திருப்போரூரை அடுத்த நாவலூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி சத்யா (வயது 30). மகள்கள் பிரீத்தா (வயது 2), ஷைனா (8), மாமியார் பரிமளா.
இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். நேற்று மாலை அவர்கள் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் நள்ளிரவில் வந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன், அவரது மனைவி சத்யா, மகள் பிரீத்தா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
சிறுமி ஷைனா, பரிமளா ஆகியோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.