செய்திகள்

திருச்சியில் லாரி-ஆம்னி பஸ் மோதிய விபத்து: டிரைவர்கள் உள்பட 3பேர் பலி

Published On 2017-01-28 10:51 GMT   |   Update On 2017-01-28 10:51 GMT
திருச்சி அருகே இன்று அதிகாலை நடந்த விபத்தில் டிரைவர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தும்மிச்சம்பட்டியை சேர்ந்தவர் திருமலைச்சாமி என்ற சேகர் (வயது53). இவர் ஆம்னி பஸ் டிரைவர். நேற்று இரவு சென்னையில் இருந்து பழனி நோக்கி ஆம்னி பஸ்சை ஓட்டி வந்தார்.

பஸ்சில் ஒட்டன் சத்திரத்தை சேர்ந்த ஷாஜகான் (35) என்பவர் மாற்று டிரைவராக இருந்தார். பஸ் திருச்சி சமயபுரம் அருகில் உள்ள சிறுகனூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அதிகாலை 4 மணிக்கு முன்னால் கம்பிகள் ஏற்றி சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது லாரி மீது ஆம்னிபஸ் மோதியது.

இதில் பஸ்சின் முன்பகுதி கம்பிக்குள் சிக்கியது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கம்பிக்குள் சிக்கிய பஸ்சை மீட்டு வெளியே எடுத்தனர்.

விபத்தில் டிரைவர்கள் சேகர், ஷாஜகான் மற்றும் பஸ்சில் வந்த திருவாரூரை சேர்ந்த மன்சூர் (35) ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News