செய்திகள்

வாரிசு சான்றிதழுக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

Published On 2017-01-28 10:01 GMT   |   Update On 2017-01-28 10:01 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வாரிசு சான்றிதழுக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விராட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் தெய்வக்கண்ணு. இவர் இறந்து விட்டார். இதையடுத்து இவரது மகன் ஞானபிரகாசம் (வயது 30). வாரிசு சான்றிதழ் கேட்டு விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அவரது மனு விசாரணைக்காக நெய்வேலி அருகே உள்ள பெரியகாப்பான்குளம் கிராம நிர்வாக அதிகாரி தாமோதரனிடம் (41) வந்தது. அவர் அந்த மனுவை வருவாய் ஆய்வாளருக்கு பரிந்துரை செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் தருமாறு ஞானபிரகாசத்திடம் கேட்டார். இதுபற்றி ஞானபிரகாசம் கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரியை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கிராம நிர்வாக அதிகாரி தாமோதரனிடம் ஞானபிரகாசம் ரூ.2 ஆயிரத்தை வழங்கினார். அதை தாமோதரன் வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணைக்குப்பின் தாமோதரனை கடலூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இளவரசன் உத்தரவிட்டார். இதையடுத்து தாமோதரன் கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

கைதான தாமோதரன் கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார் என்று கூறப்படுகிறது.


Similar News