செய்திகள்

திண்டுக்கல்லில் தே.மு.தி.க. தொண்டர்களுடன் விஜயகாந்த் சந்திப்பு

Published On 2017-01-27 09:55 GMT   |   Update On 2017-01-27 09:55 GMT
திண்டுக்கல்லில் தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார். அவருடன் கட்சியினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

திண்டுக்கல்:

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், ஒவ்வொரு மாவட்டமாக சென்று ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சி மூலம் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து வருகிறார்.

அதன்படி, திண்டுக்கல்லில் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று தேனியில் இருந்து வந்தார். திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டிருந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இன்று காலை முதலே சாரல் மழை பெய்தபடி இருந்தது. இருப்பினும் தொண்டர்கள் திருமண மண்டபம் முன் காத்திருந்தனர்.

விஜயகாந்த் மண்டபத்திற்கு வந்ததும் அவரை பார்த்த தொண்டர்கள் கைகளை மேலே உயர்த்தி ஆரவாரம் செய்தனர். அவர்களை பார்த்து விஜயகாந்த் கையசைத்தார்.

பின்னர் மண்டபத்திற்குள் சென்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார். அவருடன் கட்சியினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்றது.

விஜயகாந்த்தை பார்க்க மாவட்டம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் அதிக அளவு கூடியதால் அப்பகுதியில் ஏராளமான கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News