செய்திகள்

மயிலாடுதுறையில் வேன் மோதி மாணவன் பலி

Published On 2017-01-25 12:53 IST   |   Update On 2017-01-25 12:53:00 IST
மயிலாடுதுறையில் இன்று காலை வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூர் ஆடியப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலித் தொழிலாளி. கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன்கள் ராகவன் (7), ராகுல் (5).

இவர்கள் 2 பேரும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி சாலையில் உள்ள தனியார் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். ராகவன் 2-ம் வகுப்பும், ராகுல் 1-ம் வகுப்பும் படித்தனர்.

இன்று காலை அவர்கள் வழக்கம் போல் வேனில் பள்ளிக்கு வந்தனர்.காந்திஜி சாலையில் வேனில் இருந்து இறங்கி ரோடு ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு வேன் மாணவர்கள் ராகவன், ராகுல் மீது மோதியது. இதில் ராகவன் சம்பவ இடத்திலே பலியானான். ராகுல் கை முறிந்தது.

அவன் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான மாணவன் ராகவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து ஏற்படுத்திய வேனை ஓட்டி வந்தவர் எஸ்.எஸ். நல்லூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த டிரைவர் பிரபு தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.பள்ளி சென்ற மாணவன் விபத்தில் பலியான சம்பவம் மயிலாடுதுறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News