செய்திகள்

கரூர் அருகே வெற்றிலை பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை

Published On 2017-01-16 04:34 GMT   |   Update On 2017-01-16 04:34 GMT
கரூர் அருகே வெற்றிலை பயிர் கருகியதால் விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாலாப்பேட்டை:

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவைச்சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 48), விவசாயி. இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அதில் வெற்றிலை பயிரிட்டிருந்தார்.

ஆனால் தண்ணீர் இல்லாததால் வெற்றிலை பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் மிகவும் மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு வீட்டை விட்டு சென்ற கோவிந்தன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே லாலாப்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் தூக்குப்போட்ட நிலையில் கோவிந்தன் பிணமாக தொங்கினார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் லாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வெற்றிலை பயிர் கருகியதன் காரணமாக மனவேதனையில் இருந்து வந்த கோவிந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி கோவிந்தனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News