செய்திகள்

மன்னார்குடியில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 50 பவுன் நகை பறிப்பு

Published On 2017-01-09 17:07 IST   |   Update On 2017-01-09 17:07:00 IST
மன்னார்குடியில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 50 பவுன் நகையை 3 பேர் கும்பல் பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தெற்குவீதியை சேர்ந்த ரெங்கராஜன் என்பவரது மனைவி ராஜம்மாள் (வயது 70). இவரது கணவர் இறந்து விட்டதால் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரது மகன் கண்ணன் திருமணமாகி மனைவியுடன் டெல்லியில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை ராஜம்மாள் வீட்டுக்குள் 3 மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த கம்மல் மற்றும் பூஜை அறையில் வைத்திருந்த நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். கொள்ளையர்கள் மொத்தம் 50 பவுன் நகையை பறித்துச் சென்று விட்டனர்.

இதுபற்றி மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் ராஜம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த நபர்களை தேடி வருகிறார். மேலும் திருவாரூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜம்மாள் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க தொழிலாளி ஒருவர் வந்துள்ளார். அவரது தூண்டுதலின் பேரில் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News