செய்திகள்

தாயிடம் தகராறு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் கைது

Published On 2016-12-18 13:04 GMT   |   Update On 2016-12-18 13:04 GMT
தாயிடம் தகராறு செய்ததால் தம்பியை வெட்டி கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம்:

நாகையை அடுத்த வடக்கு பொய்கை நல்லூர் சிவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது38). இவரது தம்பி ராஜேந்திரன் (33). தொழிலாளி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

ராஜேந்திரன் தினமும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். அதேபோல நேற்று இரவும் ராஜேந்திரன் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் தனது தாய் பஞ்சவர்ணத்திடம் தகராறு செய்தார். இதை பாலமுருகன் தட்டிக்கேட்டார். இதனால் அண்ணன்- தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், அரிவாளால் ராஜேந்திரனை வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராசேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News