செய்திகள்

விதிமுறையை மீறி பணம் பரிமாற்றம்: ஈரோடு வங்கி அதிகாரிகள் 4 பேர் கைது

Published On 2016-12-14 15:11 IST   |   Update On 2016-12-14 15:11:00 IST
விதிமுறையை மீறி பணம் பரிமாற்றம் செய்ததாக ஈரோடு வங்கி அதிகாரிகள் 4பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள பூந்துறை வேலாங்காட்டு வலசு என்ற இடத்தை சோந்தவர் என். ராமலிங்கம். இவா என். ஆர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரது அலுவலகம் ஈரோடு மூலப்பாளையம் தெற்கு ஸ்டேட் பாங்கி நகரில் உள்ளது.

இது தவிர கோவை, சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற இடங்களிலும் இவருக்கு அலுவலகங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் சார்பில் கட்டுமான பணிகளும் மற்றும் பல்வேறு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மூலப்பாளையம் தெற்கு ஸ்டேட் பாங்க் ரோட்டில் உள்ள என் ஆர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

மற்றும் இந்த நிறுவனத்தின் சார்பில் ஈரோடு பகுதியில் செயல்படும் பல்வேறு அலுவலகங்கள், மற்றும் வீடுகளில் பெங்களூரில் இருந்து வந்த வருமானத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் பெங்களுரில் உள்ள காவிரி நீர்ப்பாசன கழக என்ஜினீயர் சிக்கராயப்பா, மாநில நெடுஞ்சாலை துறை என்ஜினீயர் ஜெயச்சந்திரா, மற்றும் 2 ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் ரூ. 4¾ கோடி அளவுக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டன. இந்த அடிப்படையில் தான் ஈரோட்டில் உள்ள என். ஆர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள சீரியல் எண்ணை வைத்து இந்த நோட்டுகள் எந்த பகுதிக்கு ரிசர்வ் வங்கியால் அனுப்பப்பட்டது? என்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்தனா.

அப்போது இந்த நோட்டுகள் ஈரோட்டில் உள்ள தனியார் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக வருமான வரித்துறையினர் இந்த வங்கிகளில் சோதனை நடத்தியதாகவும் அவர்கள் இந்த வங்கிகளில் கடந்த நவம்பர் மாதம் 10-ந்தேதி முதல் நடந்த பண பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது.

மேலும் தனியார் வங்கிகளில் என்ன நடைமுறையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது? என்றும் விசாரணை நடந்தது.

இந்த நிலையில் விதிமுறைகளுக்கு மாறாக பணபரிமாற்றம் நடந்ததாக கூறி ஈரோட்டை சேர்ந்த 4 வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதையொட்டி ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News