செய்திகள்

காஞ்சீபுரம் அருகே பஸ் மீது லாரி மோதல்: 3 பேர் பலி

Published On 2016-12-10 12:21 IST   |   Update On 2016-12-10 12:22:00 IST
காஞ்சீபுரம் அருகே பஸ் மீது லாரி மோதலில் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

வேலூர் மாவட்டம், அரக்கோணம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கோழி விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான மினி லாரி ஒன்று கோழிகளை ஏற்றிக் கொண்டு சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. வண்டியில் பாஸ்கர், உசேன், ஆசிப் ஆகிய 3 பேர் இருந்தனர்.

இந்நிலையில் நள்ளிரவு மினி லாரி காஞ்சீபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற மற்றொரு லாரியை கடக்க முயன்றது. இதில் நிலைதடுமாறி சாலையின் எதிர்புறம் வந்து கொண்டிருந்த தனியார் கம்பெனிக்கு சொந்தமான தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்திருந்த பேருந்து மீது மோதி கவிழ்ந்து உருக்குலைந்த அந்த மினி லாரியில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

தனியார் நிறுவன பஸ்சில் இருந்த 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணா துரை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் அதிகாலை நேரங்களில் இது போன்ற சரக்குகள் மற்றும் காய்கறிகள் ஏற்றிச் செல்லும் மினி லாரி போன்றவை நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் செல்கின்றன.

தற்போது பெரும் பனி மூட்டம் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் முகப்பு விளக்கினை எரிய விட்டு வந்தாலும் அருகில் வரும்போது தான் எதிரே வரும் வாகனத்தினை காண முடியும். எனவே வேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

மேலும் சாலையில் ஒரு பக்கத்தில் மிக குறைந்த நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டாலும் எதிரே வரும் வாகனங்கள் பொறுமைகாக்காமலும் வருவதால் விபத்து ஏற்பட காரணமாகிறது.

Similar News