செய்திகள்

நாகை மாவட்டத்திற்கு பேரிடர் மீட்பு குழுவினர் 40 பேர் வருகை

Published On 2016-12-01 10:53 IST   |   Update On 2016-12-01 10:53:00 IST
நடா புயலால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தடுக்க தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 40 பேர் நாகை மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.
நாகப்பட்டினம்:

வங்க கடலில் உருவாகி உள்ள நடா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட உள்ளது.

இம்மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மைக்கென 5 அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அளவில், தாலுகா அளவில், வட்ட அளவில் மற்றும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இக்குழுக்களானது வட கிழக்கு பருவமழை காலங்களில் மக்களுக்கு எவ்வித பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் பல துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் துணை தாசில்தார் நிலையிலான அலுவலர்கள் அடங்கிய 31 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 40 பேர் நாகை மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

அவசர நடவடிக்கைகள் தேவைப்படும் போது இந்த மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்படுவார்கள். 92 படகுகள் 4 மிதவை கப்பல்கள், மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளன.

மாவட்டத்தில் 218 இடங்கள் அதிகமாக பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டு அங்கு பொது மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேவையான மின் வசதியும், தேவையான இடங்களில் மாற்றுப்பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது. 523 கிராமங்களிலும் பேரிடர் மேலாண்மை குழு, கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது.

மின்சார துறையினர் அவரவர் பகுதிகளில் மழை காலங்களில் மின் கம்பிகள் அறுந்து விழாத வண்ணமும், தாழ்வாக செல்லா வண்ணமும் பார்த்து கொள்ள வேண்டும்.

அவசர காலத்திற்காக நீர்புகாத பையில் வெதுவெதுப்பான ஆடைகள், அடிப்படை மருந்துகள், விலையுயர்ந்த பொருட்கள், படுக்கைகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பொதுமக்கள் வெளியேற நேர்ந்தால் சென்றடையும் முகவரியை உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

பொது மக்கள் அவசர காலத்திற்கு மாநில அவசர கால நடவடிக்கை மையம் - 1070, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம்- 1077 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News