செய்திகள்

பண்ருட்டியில் வேட்பாளர்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது

Published On 2016-10-04 12:15 IST   |   Update On 2016-10-04 12:15:00 IST
பண்ருட்டியில் வேட்பாளர்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த பணத்தை போலீசார் கைப்பற்றி வேட்பாளர்களிடம் ஒப்படைத்தனர்.
பண்ருட்டி:

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் கூட்டம் அலைமோதியது.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருந்தனர்.

பண்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பத்தைச் சேர்ந்த அருள்முருகன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு அவர் ஆதரவாளர்களுடன் வெளியே வந்தார்.

அப்போது அவர் சட்டைப்பையில் இருந்த 47 ஆயிரம் ரூபாயை யாரோ மர்ம நபர்கள் அபேஸ் செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.

இதேபோல் பேர்பெரியான்குப்பதைச் சேர்ந்த குழந்தைவேல் என்பவரும் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்தார். அவரது பையில் இருந்த 23 ஆயிரம் ரூபாயையும் மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.

இதைத் தொடர்ந்து மற்றொரு பகுதியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த போது அவரிடம் இருந்த பணத்தை திருட முயன்ற வாலிபரை அவருடன் வந்த ஆதரவாளர்கள் கையும்-களவுமாக பிடித்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த வேலு (வயது 37) என்பதும், வேட்பாளர்கள் அருள்முருகன், குழந்தை வேல் ஆகியோரிடம் பணத்தை பறித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து வேலுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த பணத்தை போலீசார் கைப்பற்றி வேட்பாளர்களிடம் ஒப்படைத்தனர்.

Similar News