செய்திகள்

அச்சரப்பாக்கம் அருகே கார் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

Published On 2016-09-26 09:20 IST   |   Update On 2016-09-26 09:20:00 IST
அச்சரப்பாக்கம் அருகே கார் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்ததில் படுகாயமடைந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அச்சரப்பாக்கம்:

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சுந்தரராஜ்குமார் (வயது 28). கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் சர்மா (26). இவர்கள் இருவரும் தண்ணீர் சுத்திகரிக்கும் எந்திரங்கள் விற்பனை செய்து வந்தனர். நேற்று இவர்கள் இருவரும் தங்கள் நண்பரான திருச்சியை சேர்ந்த ரவீந்திரன்(30) என்பவருடன் தண்ணீர் சுத்திகரிக்கும் எந்திரங்கள் விற்பனை சம்பந்தமாக காரில் சென்னைக்கு வந்தனர். சர்மாவுக்கு சொந்தமான அந்த காரை சுந்தரராஜ்குமார் ஓட்டி வந்தார்.

நேற்று மாலை 3 மணியளவில் அச்சரப்பாக்கத்தை அடுத்த தொழுப்பேடு அருகே வரும்போது கார் நிலைத்தடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த சர்மா, சுந்தரராஜ்குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ரவீந்திரன் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சர்மா, சுந்தரராஜ்குமார் இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த ரவீந்திரன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News