செய்திகள்

பரம்பிக்குளம் தடியடி சம்பவம்: தமிழர்கள் மீது வழக்கு பதிவு செய்த கேரள போலீசார்

Published On 2016-09-19 09:34 GMT   |   Update On 2016-09-19 09:34 GMT
கேரள வனத்துறையினர் பரம்பிக்குளம் பள்ளி வேனுக்கு தடை விதித்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கேரள போலீசார் தமிழர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி:

பரம்பிக்குளத்தில் உள்ள பொதுமக்களின் குழந்தைகள் பள்ளி செல்வதற்காக தமிழக பொதுப் பணித்துறை சார்பில் வேன் இயக்கப்பட்டுவந்தது. இந்த வேன் செல்ல கேரள வனத்துறையினர் திடீரென தடை விதித்தனர்.

இதனால், கடந்த 12-ந் தேதி 22 மாணவர்கள் பள்ளி செல்லமுடியாமலும், காலாண்டு தேர்வு எழுத முடியாத நிலையும் ஏற்பட்டது. இதைதொடர்ந்து இந்த சம்பவத்தை கண்டித்து பரம்பிக்குளம் பகுதி பொதுமக்கள் அங்கு கேரள வனத்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென வந்த கேரள போலீசார், அங்கு நின்ற தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் மீதும், பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தினர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட பரம்பிக்குளம் வந்த கேரள மாநிலம் நெம்மாறை தொகுதி எம்.எல்.ஏ பாபு தடியடி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றார்.

இந்த நிலையில், பரம்பிக்குளம் பொதுமக்கள் மீது 4 பிரிவுகளில் கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் மீது 5 பேருக்கும் மேல் கூடுதல் (147), பொது இடத்தில் கூட்டம் கூடுதல் (148), அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தல் (353), சாலை மறியலில் ஈடுபடுதல் (188) என 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தடியடியில் ஈடுபட்ட 13-க்கும் மேற்பட்ட கேரள போலீசாரில் வெறும் 6 போலீசார் மீது மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுபற்றி பரம்பிக்குளம் பொதுமக்கள் கூறும்போது, ‘‘அப்பாவி பொது மக்களை தண்டிக்கும் வகையில் 4 பிரிவுகளின் கீழ் கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது எங்களை மேலும் அதிருப்தியடைய செய்துள்ளது. தடியடி நடத்திய கேரள போலீசார் மீது கண் துடைப்புக்காக தாக்குதல் நடத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

Similar News