செய்திகள்

ஆலாந்துறை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

Published On 2016-09-19 05:21 GMT   |   Update On 2016-09-19 05:21 GMT
ஆலாந்துறை அருகே காட்டு யானை தாக்கி பலியான தொழிலாளி உடலை மீட்ட போலீசார், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

தூத்துக்குடி மாவட்டம் அழகேசபுரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 50). இவர் கோவை டவுன்ஹாலில் தங்கி இருந்து தங்க பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதாக தனது நண்பரிடம் கூறிவிட்டு புறப்பட்டார். பூண்டி ரோடு தண்ணீர்பந்தல் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக காட்டு யானை வந்தது.

யானையை பார்த்து அதிர்ச்சியடைந்த பொன்ராஜ் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடினார். ஆனால் அவரை விடாமல் துரத்திய காட்டு யானை பொன்ராஜை தாக்கி மிதித்து கொன்றது. இதில் சம்பவ இடத்திலேயே பொன்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானை தாக்கி பலியான பொன்ராஜின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News