சிறுவன் கழுத்தை அறுத்து கொலை: கைதான இளம்பெண் சிறையில் அடைப்பு
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள சித்தேரியை சேர்ந்த தொழிலாளி முருகேசனின் மகன் நித்தீஷ் (வயது 4). பிரிகேஜி படித்து வந்த அவன் கடந்த 23-ந் தேதி வீட்டின் கழிவறையில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டான்.
இதுகுறித்து ராமநத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் கள்ளக்காதலை கண்டித்ததால் பழிவாங்கும் வகையில் நித்தீஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த கொலைக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் பரமேஸ்வரி (19) க்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது.
அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அருள்ராஜ் என்ற வாலிபரை பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து வந்தேன். இதை அறிந்த பெற்றோர் எனது தாய்மாமனான ராமருக்கு திருமணம் செய்து வைத்தனர். எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் என் கணவர் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு அருள்ராஜூடன் நெருங்கி பழகிவந்தேன்.
ஒருநாள் அருள்ராஜ் என்னுடன் தங்கியிருந்தபோது சிறுவன் நித்தீசின் தந்தை முருகேசன் பார்த்து விட்டார். அவர் ஆத்திரமடைந்து அருள்ராஜை தாக்கி விரட்டினார். என்கனவர் ராமருக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவித்தார். இதனால் கோபமடைந்து ஊருக்கு வந்த என் கணவர் என்னை தாக்கினார்.
எனவே ஆத்திரமடைந்த நான் முருகேசனை பழிவாங்க சிறுவன் நித்தீசை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று தெரிவித்தார். இதையடுத்து பரமேஷ்வரியை போலீசார் கைது செய்தனர். பரமேஸ்வரியின் கள்ளக்காதலன் அருள்ராஜூக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகத்தினர். சென்னையில் இருந்து அவரை ராமநத்தம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர். சிறுவன் நித்தீஷ் கொலை செய்யப்பட்ட அன்று அருள்ராஜ் சென்னையில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அருள்ராஜை போலீசார் விடுவித்தனர்.
கைது செய்யப்பட்ட பரமேஸ்வரியை திட்டக்குடி கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் பரமேஸ்வரி கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பரமேஸ்வரிக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. தாய் சிறைக்கு சென்றுவிட்டதால் அந்த குழந்தை தவித்தது.
போலீஸ் நிலையத்தில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து சென்றபோது பரமேஸ்வரி தனது குழந்தையை பார்த்து கண்ணீர்விட்டு அழுதார். தற்போது அந்த குழந்தை பரமேஸ்வரியின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறுவன் கொலையில் 3 நாட்களில் துப்புதுலக்கிய தனிப்படை போலீசாருக்கு சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டு தெரிவித்தார். தனிப்படை பிரிவை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் ராஜாராம், சுதாகர், போலீசார் தனபால், தனஜெயன், கருப்பையா, பாலு, மணிகண்டன், காந்தி ஆகியோருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் ஊக்கப்பரிசு வழங்கினார்.