செய்திகள்

செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் விரிசல்: சென்னை ரெயில்கள் தாமதம்

Published On 2016-08-26 13:45 IST   |   Update On 2016-08-26 13:45:00 IST
செங்கல்பட்டு அருகே உள்ள ஒத்திவாக்கம் ரெயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் இன்று அதிகாலை விரிசல் ஏற்பட்டது.
செங்கல்பட்டு:

விழுப்புரம்-எழும்பூர் நோக்கி வரக்கூடிய பாதையில் ஏற்பட்ட திடீர் விரிசல் குறித்து செங்கல்பட்டு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மதுரையில் இருந்து எழும்பூர் நோக்கி பாண்டியன் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. விரிசல் குறித்து என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த ரெயில் ஒத்திவாக்கம் அருகில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வந்த முத்துநகர், ராமேஸ்வரம், சேது, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழியில் நிறுத்தப்பட்டன.

தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் 6 மணி முதல் ஈடுபட்டனர். அதனை சரி செய்ய 2 மணி நேரம் நீடித்தது. பின்னர் 8 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற ரெயில்களும் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன.

தண்டவாளம் விரிசல் காரணமாக பாண்டியன் உள்ளிட்ட 4 ரெயில்களும் 2 மணி நேரம் தாமதமாக எழும்பூர் வந்து சேர்ந்தன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

Similar News