செய்திகள்

நர்சிங் கல்லூரி தாளாளர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2016-08-20 07:41 IST   |   Update On 2016-08-20 07:41:00 IST
ராதாபுரத்தில் தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராதாபுரம்:

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவர் ராதாபுரத்திலும், வள்ளியூரிலும் நர்சிங் மற்றும் மருத்துவ துணை படிப்புகளுக்கான கல்லூரிகளை தாளாளராக இருந்து நடத்திவந்தார். வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்புவது மற்றும் பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

இவருடைய மனைவி உமா என்ற இசக்கியம்மாள் அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு என்ஜினீயரிங் பட்டதாரியான சுபாஷ், ஐ.டி.ஐ. படித்துள்ள நிஷாந் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவரும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட முருகன் நேற்று நள்ளிரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். முருகன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், சில ஆண்டுகளாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாகவும், இதற்காக சிகிச்சை பெற்றும் நோய்கள் குணமாகாததால் மனமுடைந்ததாகவும் தெரிகிறது. வேறு ஏதாவது காரணமா? என்றும் போலீசார் விசாரிக்கிறார்கள்.

Similar News