செய்திகள்

செல்பி எடுத்த போது கிணற்றில் மூழ்கி பலியான மாணவன் உடல் 42 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

Published On 2016-08-17 03:59 GMT   |   Update On 2016-08-17 03:59 GMT
‘செல்பி’ எடுத்த போது கிணற்றில் மூழ்கி பலியான மாணவன் உடல் 42 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது
கோவை:

கோவை தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். பள்ளி ஆசிரியர். இவரது மகன் ஹரீஸ் (வயது 17) பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் விடுமுறை நாளையொட்டி ஹரீஸ் தனது நண்பர்களுடன் சிங்கா நல்லூர் ஜி.வி.ரெசிடென்சி பகுதிக்கு சென்று விளையாடி னார். பின்னர் அங்குள்ள பாழடைந்த கிணற்றுக்குள் இறங்கி படியில் நின்றவாறு செல்போனில் ‘செல்பி’ போட்டோ எடுத்ததாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக ஹரீஸ் கால் தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கினார். தகவல் அறிந்து பீளமேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர் உடலை தேடினர். நேற்று 2-வது நாளாக தேடியும் ஹரீஸ் உடல் கிடைக்கவில்லை.

மாணவர் ஹரீஸ் மூழ்கிய கிணறு 120 அடி ஆழம் கொண்டது. இதில் 70 அடிக்கு தண்ணீர் உள்ளது. எனினும் இந்த கிணற்றை யாரும் பயன்படுத்துவது கிடையாது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட குப்பைகளை மூட்டை, மூட்டையாக கட்டி இந்த கிணற்றில் வீசி வந்துள்ளனர். எனவே ஹரீஸ் உடல் கிணற்றுக்குள் சிக்கியிருக்கலாம் என கருதப்பட்டது.

இதைத்தொடர்ந்து கிணற்றுக்குள் மூழ்கிய மாணவர் உடலை மீட்பதற்காக தூத்துக்குடியில் இருந்து கடலில் மூழ்கி தேடுவதில் சிறப்பு பயிற்சி பெற்ற ‘ஸ்கூபா டைவிங்’ வீரர்கள் 7 பேர் அடங்கிய குழுவினர் வரவழைக்கப்பட்டனர். இன்று அதிகாலை 5 மணிக்கு அவர்கள் கோவை வந்தனர்.

காலை 7 மணிக்கு அவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர், ‘ஐ வி‌ஷன்’ எனப்படும் தண்ணீருக்குள் தேடும் காமிரா ஆகியவற்றை பொருத்திக் கொண்டு கிணற்றுக்குள் மூழ்கி மாணவர் உடலை தேடினர். சிறிது நேரத்தில் ஹரீஸ் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உடலை பார்த்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர் மாணவர் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் மதியம் 1.30 மணிக்கு மாணவர் கிணற்றில் மூழ்கினார். சிறிது நேரத்தில் அவரது உடலை தேடும் பணி தொடங்கியது. எனினும் சுமார் 42 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்று காலை 7.15 மணிக்கு ஹரீஸ் உடல் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News